tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : உய்யவந்தான் தியாகி பழனி நினைவு நாள்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது உய்யவந்தான் கிராமம். இவ்வூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளராகச் செயல்பட்டு வந்தார் தோழர்  பழனி.

உடைகுளம் ஊராட்சித் தலைவராக இருந்த பன்னீர்செல்வம் ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டார். இதற்கெதிரான இயக்க நடவடிக்கைகளை முன்னின்று நடத்தியதோடு பன்னீர்செல்வம்  மீது முறையான நடவடிக்கை கோரி சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதன் விளைவாக பன்னீர்செல்வம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

பன்னீர்செல்வத்தின் மோசடியையும் சமூக விரோதச் செயலையும் எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களில் முன்னின்றதாலும் பன்னீர்செல்வம் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையிலும் ஆத்திரமடைந்த பன்னீர்செல்வத்தின் கும்பலால் 2000ஆம் ஆண்டு ஜுன் மாதம் 13 ஆம் நாள் பட்டப்பகலில் தோழர் பழனி படுகொலை செய்யப்பட்டார். ஊழல், முறைகேடுகளுக்கு எதிராக தோழர் பழனி போன்றோர் புரிந்த தியாகங்கள் வீண்போகா வண்ணம் அவர் உயர்த்திப் பிடித்த செங்கொடியைத் தாழவிடாது கொடுமைகளுக்கு எதிராக அச்சமின்றிப் போராட வேண்டியது மார்க்சிஸ்டுகளின் மகத்தான கடமை.

===பெரணமல்லூர் சேகரன்===